ஆசையெனும் - 1
ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ் செனவுமன
தலையுங் காலம்
மோசம் வரும் ; இதனாலே கற்றதுங்கேட் டதுந்நூர்ந்து
முத்திக் கான
நேசமுநல் வாசமும்போய்ப், புலனாயிற் கொடுமைபற்றி
நிற்ப ரந்தோ!
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே! நிராசையின்றேற்
றெய்வமுண்டோ?
ஆசையெனும் பெருங்காற்றூடு - ஆசையென்று சொல்லப்படுகிற பெரிய காற்றினில்
இலவம்பஞ்செனவும் - (அலையும்) இலவம் பஞ்சைப் போல
செனவுமனதலையுங் காலம் மோசம் வரும் - மனது அலயும் காலத்தில் மோசம் நேரிடும்
இதனாலே கற்றதுங்கேட்டதும் தூர்ந்து - இதனால் கற்ற கல்விகளும் கேட்ட கேள்விகளும் வீணாகி
முத்திக் கான நேசமுநல் வாசமும்போய் - மோட்சம் அடைவதற்கான விருப்பமும் சிறந்த வாசமும் நீங்கி
புலனாயிற் கொடுமைபற்றி நிற்ப ரந்தோ - இந்த ஐம்புலன் வழியாக கொடுமையான சம்சாரத்தைப் பற்றி கொண்டு நிற்பர் அந்தோ
தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே - ஒளி நிறைந்த அருள் பழுத்த பராபரமே
நிராசையின்றேற் றெய்வமுண்டோ? - நிராசை இல்லையேல் ஒருவருக்கு தெய்வம் உண்டோ?
ஆசையே எல்லா அழிவுக்கும் மூல காரணம். ஆசையினால் கற்றதும் கேட்டதும் வீணாகப் போய், மோட்சத்தை அடைவதற்கான விருப்பமும் இல்லாமல் இந்த சம்சாரத்திலேயே மூழ்கிக் கிடப்பர் என்பதே இதன் சாரம்.
3 Comments:
ஆசைஅறுமின்! ஆசைஅறுமின்! ஈசனோடயினும் ஆசைஅறுமின் என்ற திருமூலர் வாக்கும் அதுதான்.சொல்லும் விஷயம் ஒன்றானாலும் சொல்லும்முறைதான் வேறு தி. ரா ச
மிக்க நன்றி சந்திரசேகர். அடிக்கடி வந்து போங்க...
அருமையான தாயுமானவர் பாடல். அதற்கான எளிய விளக்கம். நன்றாக இருக்கிறது ஹரியண்ணா.
தி.ர.ச சொல்வது போல அருணகிரி சொல்ல வருவதும் இதுதான். ஆனால் சொல்லும் முறை வேறு மாதிரி இருக்கும். பெரியவர்கள் எல்லாம் சொல்லியிருப்பது கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும்.
Post a Comment
<< Home